ஒளியின் தேவ இரகசியங்கள்

1வது – இறை மகன் இயேசு திருமுழுக்குப் பெற்றதை தியானிப்போம்
இறை சித்தத்தை நிறைவேற்ற இறைமகன் இயேசு தன்னையே விட்டுக்கொடுத்து புனித யோவான் கையால் திருமுழுக்குப் பெற்றுள்ளார். அவ்வாறே தன்னையே தாழ்த்திய அன்னை மரியாள் போன்று நாமும் இறை வார்த்தைக்குக் கட்டுப்பட்ட மக்களாக வாழ வாரமருள வேண்டுமென இக்காரணிக்க வேளையில் மன்றாடுவோம்..

2வது – கானாவூரில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போம்
தன்னை நம்பியவர்களை மரி அன்னை கைவிடமாட்டாள் என்பதற்கு கானா ஊர்த் திருமணம் ஒரு நல்ல உதாரணமாக உள்ளது. எனவே எமது கவலைகள், துன்பங்கள், மன வேதனையோடு தனிமையில் நாம் விடும் கண்ணீர்த் துளிகள், பெரு மூச்சுக்கள் ஒவ்வொன்றையும் இக்காரணிக்க வேளையில் அன்னையின் பாதத்தில் காணிக்கையாக சமர்ப்பிப்போம்.

3வது – இறைமகன் விண்ணரசின் மறு வருகையை அறிவித்ததை தியானிப்போம்
இறை மகன் இயேசு மாட்சிமையோடு மீண்டு வர இருக்கின்ற அரிய வேளைக்காக எம்மைத் தயார்செய்யவும், மனவாளது வருகைக்காக முன் மதியோடு காவலிருந்த கன்னிப்பெண்கள் போன்று நாமும் தயாராக இருக்க வரமருள வேண்டுமென்று எமது பாவ நிலைகளை உணர்ந்து இக்காரணிக்க வேளையில் மன்றாடுவோம்.

4வது – இறைமகன் இயேசு தபோர் மலையில் மறு உருவானதை தியானிப்போம்
உத்தரிப்பு நிலையில் தமது மறு வாழ்விற்காக காவலிருக்கின்ற அனைத்து ஆன்மாக்களையும் ஒப்புக் கொடுப்போம். எமது இறுதி மரண வேளையில் இறைமகன் இயேசுவினதும், அன்னை மரியாளினதும் தரிசனம் கிடைக்கப்பெறவும், எமது ஆன்மாவை அவர்களது திருக்கரங்களில் ஒப்படைக்கவும், நாம் நல்ல மரணமடையவும் இக்காரணிக்க வேளையில் உருக்கமாக மன்றாடுவோம்.

5வது– இறைமகன் இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை தியானிப்போம்
'உலகம் முடியுமட்டும் உன்னோடு நானிருப்பேன்' என்றவர் தமது உடலையும் இரத்தத்தையும் எமக்கு நித்திய வாழ்வளிக்கும் அன்ன பானமாக வழங்கியுள்ளார். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் வாழ்வதற்கென தமது உடலையும், உயிரையும் எமக்காக அர்ப்பணம் செய்து எம்மை உருவாக்கிய பெற்றோர் இவ்வுலகில் வாழ்ந்தாலென்ன மறுவுலகில் வாழ்ந்தாலென்ன அவர்களை ஆசீர்வதித்திட வேண்டுமென இக்காரணிக்க வேளையில் மன்றாடுவோம்.