துயரம் நிறை தேவ இரகசியங்கள்

1வது – இறைமகன் இயேசு ஜெத்சமெனியில் வியாகுலப் பட்டதை தியானிப்போம்

ஒரு மணி நேரமாவது விழித்திருந்து செபிக்க உங்களால் முடியாமல் போனதா?' என தமக்காக செபிக்குமாறு ஆண்டவர் இயேசு கேட்கின்ற வேளை இது. இக்காரணிக்க வேளையில் நாம் செபிப்பதற்குக் கடமைப்பட்ட ஒவ்வொருவரையும், செப வாழ்க்கையே அற்று வாழும் ஒவ்வொருவரையும் ஆண்டவர் இயேசுவின் வியாகுலம் நிறைந்த பாடுகளுக்குள்ளே வைத்துக் காத்தருள வேண்டுமென உருக்கமாக மன்றாடுவோம்.

2வது – இறை மகன் இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்டதை தியானிப்போம்
பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற பரபாவை விடுதலை செய்து இயேசுவைக் கசையால் அடித்து சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான் என மத்தேயு நற்செய்தி 15:15ல் நாம் வாசிக்கின்றோம். தாம் செய்யாத குற்றங்களுக்காக மக்கள் மத்தியில் அவமானப்படுத்தப்படும் ஒவ்வொருவரையும் வாய் பேசாத செம்மறியான இறைமகன் இயேசுவின் பாடுகளுக்குள்ளே வைத்துக் காத்தருள வேண்டுமென இக்காரணிக்க வேளையில் மன்றாடுவோம்.

3 வது – இறைமகன் இயேசு மீது முள் முடி சூட்டப்படுதலை தியானிப்போம்

ஒரு முள்முடி பின்னி அவரது தலையின் மேல் வைத்து .....அவர் முன் முழந்தால் படியிட்டு யூதரின் அரசே வாழ்க என ஏளனம் செய்தார்கள் என மத்தேயு நற்செய்தி 27:29-30 வசனங்கள் எமக்குத் தெரிவிக்கின்றது. கற்பழிப்பு மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத தோல்விகளால் அவமானங்களைச் சகிக்க முடியாது தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுவோரை இக்காரணிக்க வேளையில் இறைமகன் இயேசுவின் திருப்பாதவடிகளில் சமர்ப்பித்து மன்றாடுவோம்.

4வது – இறைமகன் இயேசு மீது சிலுவை சுமத்தப்படுவதை தியானிப்போம்
இயேசு சிலுவையைத் தாமே சுமந்து கொண்டு மண்டை ஓடு எனப்படும் இடத்திற்குச் சென்றார் என யோவான் நற்செய்தி 16:16-17 வசனங்களில் நாம் காணலாம். இன்று தமது வயோதிப வயதில், பராமரிப்பார் யாருமின்றி தனிமையில் வாடும் ஒவ்வொருவரையும், விண்ணுக்கும் மண்ணுக்கும் உறவுப்பாலமான சிலுவை மரத்தைச் சுமந்தவரது பாடுகளுக்குள்ளே வைத்தருள வேண்டுமென இக்காரணிக்க வேளையில் மன்றாடுவோம்.

5வது – இறைமகன் இயேசு சிலுவையில் உயிர் துறந்ததனை தியானிப்போம்
இறைமகன் இயேசு தமது மரண வேளையில் எல்லாம் நிறைவேறிற்று என்று கூறித் தலைசாய்த்து ஆவியை ஒப்படைத்தார் என யோவான் நற்செய்தி 19ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. தமது இறுதி மரண வேளையில் ஆதரிப்பார் யாருமின்றி அநாதைகளாக இறந்து போகும் ஒவ்வொருவரையும் இவ்வேளையில் எமது நினைவில் கொண்டு வருவதோடு எம் ஒவ்வொருவருக்கும் நல் மரணம் கிடைக்கவும் எமது இறுதி மரண வேளையில் நாம் இயேசு, மரி, சூசை துணை என எமது ஆன்மாவை ஒப்படைத்து எமக்கு நல்ல மரணம் கிடைக்க மன்றாடுவோம்.